குன்னூர் ராஜாஜி நகரில் கனமழைக்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது-வீட்டில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

குன்னூர் : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கனமழை காரணமாக, குன்னூர் அருகே உள்ள ராஜாஜி நகரில் ஷர்மிலா என்பவரின் வீட்டின் 30 அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர் இடிந்து ஒரு வீட்டின் முன்பகுதியை மூடியது.

இதில், வீட்டில் இருந்த ஷர்மிலா, உபயதுல்லா மற்றும் சதாமுல்லா ஆகிய மூன்று பேர் சிக்கி கொண்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரீன் மற்றும் துணை தலைவர் வாசிம் ராஜா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வீட்டின் முன்புறம் இருந்த கற்களை அகற்றி வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து அருகே உள்ள குடியிருப்புகள் சரியும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா கூறுகையில்,‘‘குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் வீட்டில சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பாத்திரமாக மீட்டனர். அப்பகுதியில் உடனடியாக   சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: