கல்லூரி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பலி: வாணியம்பாடி அருகே சோகம்

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே சுண்ணாம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(19). இவர் குடும்பத்தினருடன் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். மேலும் சென்னை கிண்டியில், தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை விமான போக்குவரத்து மேலாண்மை படித்து வந்தார். சென்னையில் தனுஷ் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராகுல்(21). தீபாவளி விடுமுறைக்காக ஆலங்காயம் அடுத்த சுண்ணாம்புபள்ளம் கிராமத்துக்கு வந்தார். அப்போது தனது நண்பர் ராகுலையும் உடன் அழைத்து வந்தார்.

தீபாவளி விடுமுறை முடிந்து நண்பர்கள் 2 பேரும் இன்று சென்னைக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். நேற்று மாலை  இருவரும் சேர்ந்து அருகே உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராகுல்  இடுப்பில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன் அவிழ்ந்து ராகுல் கிணற்றில்  மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தனுஷ் ராகுலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிணற்றின் உள்ளே சென்ற இருவரும் வெகு  நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கும், ஆலங்காயம்  போலீசாருக்கும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு  வீரர்கள் கிணற்றில் இறங்கி இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  நீண்டநேர தேடுதலுக்கு பிறகு இரவு 7 மணியளவில் ராகுல் மற்றும் தனுஷ்  இருவரும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: