ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார்? எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் தாக்கு

மதுரை: ‘மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்’ என்று எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் தாக்கிப் பேசினார்.

சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தேவர் தங்கக் கவசத்தை பொருத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்து அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆரம்பத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை என்ன என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் மீது யார் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள்.

அதிமுக தொண்டர்கள் இயக்கம். பல பிரச்னைகளை, அதுவும் விரும்பத்தகாத பிரச்னைகளை யார் உருவாக்கியது என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு பெரிய செயலை, பாவத்தை செய்து விட்டு அடுத்தவர் மீது பழி போடுவது என்பது ஏற்புடையதல்ல. மெதுவாக ஊர்ந்து, ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொண்டர்களை உரிய நேரத்தில் அணுகுவேன். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: