உள்துறையின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜய்குமார் ஐபிஎஸ் திடீர் ராஜினாமா

சென்னை:  ஒன்றிய உள்துறை மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த விஜய்குமார் ஐபிஎஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி விஜயகுமார், 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற தனிப்படையின் தலைவராக இருந்தவர். பின்னர் அவர் மத்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றினார். அப்போது நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதன்பின்னர், 2012ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின், இவர் உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தங்கியிருந்த அவர் அங்கிருந்து காலி செய்து சென்னைக்கு இடம்பெயர்ந்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல் பிரிவு அதிகாரிகளுக்கும் பதவிக்காலம் முழுவதும் ஒத்துழைப்பு அளித்தற்காக விஜய்குமார் நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி இடது சாரி தீவிரவாத பிரச்னைகளில் அரசுக்கு விஜய்குமார் ஆலோசனை வழங்கி வந்தார்.

Related Stories: