வேளச்சேரி அருகே மதுபோதை அதிகமாகி பெண் பரிதாப சாவு

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (32). ஏற்கனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, முதல் கணவரை பிரிந்து விட்டார். மது பழக்கத்திற்கு அடிமையான சுபத்ராவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த ஏழு வயது மகன் உள்ளார். நேற்று முன்தினம்  வீட்டில் தனியாக இருந்த சுபத்ரா, அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மயங்கி கிடந்துள்ளார். வேலைக்கு சென்ற பார்த்திபன் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, மனைவி போதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுபத்ரா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, அளவுக்கு அதிகமாக  மது அருந்தியதால் சுபத்ரா இறந்தாரா  அல்லது குடும்ப பிரச்னை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: