காங்கிரஸ் தலைவர் தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை: சத்தியமூர்த்தி பவனில் ஆதரவு திரட்டுகிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகிறார். சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரசார் மத்தியில் ஆதரவு திரட்டுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சசி தரூர் மற்றும் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த சசி தரூர், சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டினார். இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாலை 4 மணி அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். சென்னை சத்தியமூர்த்திபவனில் வரும் 17ம்தேதி வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் 19ம்தேதி அன்று இந்த வாக்குகள் எண்ணப்பட்டு புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும்.

Related Stories: