வருகிற 15ம் தேதி நியூ கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் வருகிற 15ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கோ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்களால் 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் சிறப்பு நேர்வாக உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு கல்வித்தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள வரும் உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு  பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  உள்பட அனைத்து நபர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் நேரில் வந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: