மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் ஊராட்சியில் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்க்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சி மிக வேகமாக வளர்ந்து தற்போது நகர்புறமாக மாறி வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செய்யூர் - வந்தவாசி நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்து தினந்தோறும் அகற்றவேண்டிய கழிவுகளை, அந்த கடைகளின் உரிமையாளர்கள் மூட்டைகளாக கட்டி சோத்துப்பாக்கம் ஊராட்சியில் செல்லும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.