வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது; அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் பேசியதாவது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணன் தெருவை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் 1989ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தில் ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ரூ.13.40 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடியாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுக்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் ஸ்ரீராலு, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கீதா சுரேஷ், வேளாங்கண்ணி, பகுதி செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் கவுரிஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: