பெண் ஊழியரை பலாத்காரம் செய்த வழக்கில் கன்சல்டன்சி உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: மேல்முறையீடு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளருக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு பிரிவில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்நிறுவன உரிமையாளர் ஆண்டனி ஜான் மில்டன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த புகாரில், மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், நிர்வாண நிலையில் இருந்தபோது புகைப்படங்களை எடுத்து அதை காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம், கடந்த 2014ம் ஆண்டு அந்த நிறுவன உரிமையாளர் ஆண்டனி ஜான் மில்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிறுவன உரிமையாளர் சார்பில் சம்பவத்தன்று அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ததில் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் நாளில் அலுவலகத்தில் புகார்தாரர் மகிழ்ச்சியுடன் நடமாடுவது பதிவாகியுள்ளது. புகார்தாரரின் நிர்வாண புகைப்படங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய அவரது மொபைல் போனை போலீசார் கைப்பற்றவில்லை.

புகார்தாரர் அளித்த சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளன. மருத்துவ சான்றுகளுடன் அது உறுதிப்படுத்தவில்லை. புகார்தாரர் முற்றிலும் நம்பகமான சாட்சி அல்ல. சரியான உறுதிப்படுத்தல் இல்லாமல் அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையை அணுகுவதற்கு முன்பு அவரும் அவரது தாயும் நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தண்டனையை உறுதிபடுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: