கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா என அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது. மேலும் ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் நேற்று அதிக குளிர்ச்சி, அதிக வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவியது. சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடைகள், கைடுகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். எனவே வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.