ஒன்றிய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வெல்ல வரும் 9ம் தேதி ஒரு நாள் கருத்தரங்கம்: இணையதளம், அரசு கேபிள் டிவியில் நேரடி ஒளிபரப்பு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பி பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் சிஜிஎல்இ போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் இருந்து ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் சி பிரிவு பணிகள் 12ம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் சிஎச்எஸ்எல் தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   

தமிழக மாணவர்கள் இந்த போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை 9ம் தேதியன்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10 மணி முதல் நடைபெறும். அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக  இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும்.

Related Stories: