மதமாற்றத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டவர் கொலை 10 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கும்பகோணம் அருகில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) 13 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட 10 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை தொடங்காமலும், விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தாமலும் தாமதிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை விசாரணை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும். பாதுக்காக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும், மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் விசாரணை நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும். முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புறுத்த மாட்டோம் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி ஜாமீன் கேட்க முடியாது. எனவே, 10 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: