வேலூர்: பள்ளிகொண்டா அருகே ரூ.14.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த போலீசார் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சின்னகோவிந்தம்பாடி பகுதியில், கடந்த 29ம் தேதி இரவு சாலையோரமாக காரில் இருந்து லாரிக்கு பண பண்டல்களை ஒரு கும்பல் மாற்றிக் கொண்டிருந்தது. அப்போது, அந்தவழியாக ரோந்து சென்ற பள்ளிகொண்டா போலீசார், அந்த கும்பலை பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த பண்டல்களில் சென்னை பிராட்வேயில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கார், லாரி மற்றும் ரூ.14 கோடியே 70 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.