காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கரைகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 38,680 எண்ணிக்கையிலான பனைமர விதைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை கொண்டு நடவு செய்யப்பட்டன.
அதன்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 பணி இடங்களில் 8 ஆயிரம் பனை விதைகளும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 65 பணிதளங்களில் 14 ஆயிரத்து 180 பனை விதைகளும், பெரும்புதூர் ஒன்றியத்தில் 19 பணி இடங்களில் 3 ஆயிரம் பனை விதைகளும் நடவு செய்யப்படுகிறது. இதேபோன்று, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பணிதளங்களில் 1 ஆயிரத்து 500 பனை விதைகளும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 12 பணிதளங்களில் 15 ஆயிரம் பனை விதைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.