மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். நடிப்பு கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம். அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் ’சிவாஜி’ என்ற பட்டம் பெற்று, அந்த பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர்.

பராசக்தி ஹீரோவாக புரட்சி கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரனைய நண்பர். 1952ல் வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70ம் ஆண்டு. கலைஞரின் கூர்மிகு தமிழும் நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ் திரையுலகின் திருப்புமுனைகள். கலை உள்ள வரை செவாலியே சிவாஜி கணேசன் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: