தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் காவலர் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

சென்னை: தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இங்கு அலுவலக நடைமுறைகள், வழக்கு மேலாண்மை, பணி விதிகள், கோப்பு நிர்வாகம், விடுப்பு விதிகள் போன்ற அலுவலகம்  சார்ந்த பயிற்சிகள் மட்டுமல்லாமல் பசுமை உலகம், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் தொழில்நுட்பம் போன்ற தற்காலச் சூழலில் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய நவீன தலைப்புகளிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலிப்பாதை (YouTube channel) ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சிக்  காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும் வகையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் இதில் அவ்வப்போது ஏற்றப்படுகின்றன.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வினை நவம்பர் 27-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதற்கான நேர்முக இலவசப் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் போட்டித் தேர்வு மையங்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியிலும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் நடத்தி வருகின்றன.

நேரடிப் பயிற்சி வகுப்புகளில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் பங்கெடுக்க முடியும். மேலும் சென்னை தவிர இதர பகுதிகளில் வசிப்போருக்கு இதற்கான வாய்ப்பே இல்லை, எனவே, இந்தப் பயிற்சி தமிழகமெங்கும் உள்ள அனைவருக்கும் சென்றடையும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது காணொலிப்பாதையான AIM TN என்ற யுடியூப் சேனலில் இத்தேர்விற்கான பயிற்சி வீடியோக்களை 30-09-2022 முதல் பதிவேற்றம் செய்து வருகிறது. தமிழ், இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு-ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், பொது அறிவு-நடப்பு நிகழ்வுகள், உளவியல், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் என்று தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 70 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். இது தமிழகம் முழுவதிலுமிருந்து காவலர் தேர்வினை எழுதவிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: