மதுரை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்நிலை தொடர்ந்தால் கலெக்டர், மாநகராட்சி ஆணையர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனிதக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது, கழிவுநீரை அகற்றுதல், குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின் போது, பணியாளர்கள் பலர் உயிரிழந்ததால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும், பல மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களை மட்டும் ஈடுபடுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.