பொன்னியின் செல்வன் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமரர் கல்கி எழுதி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார்.  இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: