2021-2022ம் ஆண்டில் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்த்தனர்

புதுடெல்லி: உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 2021-2022-ம் ஆண்டில் அதிக அளவில் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று.

இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022’ என்கிற பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டார். அதில் 2021-2022ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021-2022ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: