அரசு பஸ்சில் செல்லும் மாணவிகளை இழிவாக பேசிய டிரைவர் பணியிடை நீக்கம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் தினசரி பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, அரசு பஸ் டிரைவர் மாணவிகளை கடும் சொற்களால் வசைபாடி, இழிவாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் முறையிட்டதோடு, பள்ளிக்குச் செல்ல மறுத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று மேட்டூரில் இருந்து நங்கவள்ளி வழியாக தாரமங்கலம் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி வாயிலாக உறுதி அளித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இதனிடையே தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், அரசு பஸ் டிரைவர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: