சேலம் அருகே இன்று காலை பரபரப்பு; காதல் விவகாரத்தில் சிறுமி கொலை?: தாய் தற்கொலை முயற்சி

சேலம்: சேலம் அருகே காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்து விட்டு தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி நாடகமாடுவதாக காதலனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் ஸ்ரீதேவி (17). 9ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தாள். இவளும் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்(22) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஸ்ரீதேவியை சம்பத், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடத்திச்சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலத்தில் சம்பத்தின் உறவினர் வீட்டில் இருந்த ஸ்ரீதேவியை மீட்டனர். சம்பத் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்து வந்தநிலையில், தாய் சேமலா (36) நேற்று இரவு 12 மணி அளவில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்நிலையில் மனைவியுடன் ஆஸ்பத்திரியில் இருந்த அறிவழகன் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது ஸ்ரீதேவி வீட்டில் இறந்து கிடந்தாள். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது சம்பத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், திருமணத்திற்கு மறுத்த ஸ்ரீதேவியை பெற்றோர் கொலை செய்து விட்டு, தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினர்.

இந்த மறியல் பற்றி தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி ஸ்வேதா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி மறியலை கைவிடவைத்தார். தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். அதன்பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: