சென்னை: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுதலை தடுக்கும் வகையில் விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தின் விவரங்களை பகிர்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் விவாதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை அக்டோபர் 12ம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.