சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது: அடுத்த மாதம் பொதுக்குழு கூடுகிறது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த திமுக மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இன்றும், நாளையும் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. 2வது நாளான 23ம் தேதி 21 மாவட்டங்களுக்கும், 3வது நாளான நேற்று முன்தினம் 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது.

இந்த நிலையில் 4வது நாளான நேற்று வேலூர் கிழக்கு(ராணிப்பேட்டை), வேலூர் மத்திய, வேலூர் மேற்கு(திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்கள் என 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர், முக்கிய நிர்வாகிகள் போட்டியிட  போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை அளித்தனர். இதனால், வேட்புமனு தாக்கல் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் சென்னை அண்ணா அறிவாலயம் நிர்வாகிகள், தொண்டர்களால் களைக்கட்டியிருந்தது.

நேற்றுடன் திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து விண்ணப்ப மனுக்கள் இன்றும், நாளையும் பரிசீலனை செய்யப்படுகிறது.  போட்டியிருக்கும் பட்சத்தில் அந்த மாவட்டங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். போட்டியில்லாத பட்சத்தில் விண்ணப்ப மனுக்கள் அளித்தவர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதிக்குள் திமுக தலைமை கழகம் வெளியிடும். தொடர்ந்து திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும். திமுக உட்கட்சி தேர்தல் முடிந்ததும், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் திமுக பொதுக்குழு சென்னையில் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: