தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக்கழகம் தொடக்க விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரை பணிகளை அறிமுகப்படுத்தும் விதமாக தமிழ்ப் பரப்புரைக்கழகம் தொடக்க விழா இன்று நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பான தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டமானது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் மொழி கற்கும் சூழல் அறிந்து ஐந்து நிலைகளாகப் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிப் பயன்பாட்டு அடிப்படையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், அப்புத்தகத்தை 24 மொழிகளில் மொழிபெயர்த்து வழங்குதல், புத்தகத்திலுள்ள பாடப்பொருண்மைகள் எளிதில் புரியும் வண்ணம் செயல்வழிக் கற்றல் என்ற அடிப்படையில் கற்பித்தல் துணைக்கருவிகளை உருவாக்கி அதனை இணையம் வழியாக வழங்குதல், பாடப்பொருண்மைகளைப் படித்துக் காட்டும் விதமான ஒளி ஒலிப் புத்தமாக வடிவமைத்தல், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைத் தெளிவாக அறிவதற்கேற்ப அசைவூட்டும் காணொலிகளை வழங்குதல், சொற்களஞ்சியத்தைப் பெருக்கும் விதமாக மின்அட்டைகள் வழங்குதல், புத்தகத்திலுள்ள பயிற்சிகளைத் தானே செய்து பழகுவதற்காக இணையம் வழியாக கற்றல் பயிற்சியை வழங்குதல், தமிழைப் பன்முக நோக்கில் கற்பிக்க கற்றறிந்த ஆசிரியர்களைக் கொண்டு இணையம் வழியில் வகுப்புகள் எடுத்தல், தேவைகளுக்கேற்ப ஆசிரியர்கள்/கலைப் பயிற்றுநர்களை அயல்நாட்டுக்கு அனுப்புதல்  முதலான பணிகள்  மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழியைப் பிற மொழியினரும் கற்கவும், பல்வேறு நிலைகளுக்குரிய பாடங்களைக் கற்றுத் தேர்வு எழுதி உரிய நிலைகளில் சான்றிதழ்களைப் பெறவும் தமிழ் பரப்புரைக்கழகம் திட்டங்களை உருவாக்கியுள்ளது. மேலும், கற்றல் மேலாண்மை அமைப்பு செயலி வடிவமைக்கப்படவுள்ளது.

தமிழ்மொழியை அயலகத் தமிழர்களுக்கு இணையவழியில் கற்றுக் கொடுக்க 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அயல்நாடுகளில் உள்ள தன்னார்வலர்கள் முறையாகத் தமிழைக் கற்பிக்க அவர்களுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி தொடங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்ப் பரப்புரைக் கழகத்திற்கான பணிகளை அறிமுகப்படுத்தும் விதமாக, தமிழ்ப் பரப்புரைக் கழகத் தொடக்க விழாவும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் வண்ணம் நிலை-1க்கான முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தலுக்கான இதர சேவைகள் வெளியீட்டு விழாவும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள்கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Stories: