சிதம்பரம் நகராட்சியில் ஆட்டோவில் சென்று மக்கள் பணியாற்றும் நகரமன்ற துணைத்தலைவர்

சிதம்பரம் :  சிதம்பரம் நகராட்சியில் நகர்மன்ற துணைத் தலைவர், தனது ஆட்டோவில் சென்று அன்றாடம் மக்கள் பணியாற்றுவது அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரமன்ற துணைத்தலைவராக பதவி வகிக்கும் முத்துக்குமரன் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

 நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகர மன்ற தேர்தலில் 33 வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நகர மன்ற துணைத் தலைவராக பதவி ஏற்று கொண்டார். நகராட்சி அலுவலகத்துக்கு தன்னுடைய ஆட்டோவில் அலுவலகம் வந்து அலுவலகப் பணிகளை கவனித்து விட்டு, பொதுப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

நகர மன்ற துணைத் தலைவரான பிறகும் தன்னுடைய  வாழ்வாதாரமான  ஆட்டோ ஓட்டுவதை விடாமல் செய்து கொண்டு வருகிறார். வார்டு உறுப்பினரான உடனே  தன்னுடைய  பதவிக்கு ஏற்றார் போல் வண்டி வாகனத்தை வாங்கி உலாவரும் இந்த காலத்தில் தனக்கு நகர மன்ற துணைத் தலைவர் பதவி வந்தாலும், தான் ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

கொரோனா காலங்களில் நோயாளிகளை தன்னுடைய ஆட்டோவிலேயே இலவசமாக ஏற்றி சென்று  சிதம்பரம் அரசு மருத்துவமனை, மற்றும் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்து பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். இதற்காக அப்போதைய சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் இவருக்கு சிறந்த சமூக  சேவகர் என்ற நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். மேலும் மழை, வெள்ள, காலங்களில் ஏழை எளியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

தன்னுடைய வார்டு மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொடுத்து உதவி செய்கிறார். இப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும், மின்விசிறி வசதியும் செய்து கொடுத்துள்ளார். மக்களோடு மக்களாக செயல்பட்டு வரும் இவர் பதவி வந்தாலும், கவுரவம் பார்க்காமல் தனது அன்றாட  பணிகள், முதல் அலுவலக பணிகள் வரை தன்னுடைய ஆட்டோவில் சென்று செய்து வருகிறார்.

Related Stories: