மாங்காடு அருகே ஓட்டுனரிடம் பணம் பறித்த மர்ம கும்பல்: போலீஸ் வலை

குன்றத்தூர்: மாங்காடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த கோவூரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (42). இவர் சென்னை, வடபழனியில் உள்ள அரசு பணிமனையில் பேருந்து ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக கோவூர் குன்றத்தூர் பிரதான சாலையில் உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முரளிகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த மணி பர்சை பறித்துச் சென்றது.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த கொள்ளை சம்பவம் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: