இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தமிழகம் வருகை

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தமிழகம் வந்தனர். நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்து. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதையடுத்து ஒன்றிய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்து, இலங்கை அரசுடன் பேச ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து. இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.  12 மீனவர்களுக்கும் பாஸ்போர்ட், விசா  இல்லாததால்,  இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர்.

அதோடு 12 மீனவர்களையும் நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக மீனவர்களை  வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏற்றி, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: