திருக்கோயில்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் பணி குறித்த சீராய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது

சென்னை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (13.09.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பாக கட்டப்படவுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடங்களின் பணிகள் குறித்தும், திருச்சி, குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் மனநல காப்பகத்தினை மேம்படுத்தும் பணிகள், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சார்பாக புதிதாக கட்டப்படவுள்ள மனநல காப்பகப் பணிகள் குறித்தும், பழனி,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைத்தல், திருச்சி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், அனுவாவி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தும், தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாச்சார மையங்கள் அமைத்திடும் வகையில் முதற்கட்டமாக சென்னை,

மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கலாச்சார மையம் அமைப்பது குறித்தும், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணி குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபதிருக்கோயில்களில் சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வின்போது தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி  ரூ.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் சித்த மருத்துவமனை ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், இ.ஆ.ப, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன்,இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பின்(ITCOT) மேலாண் இயக்குநர் திரு.பி.ஆர்.பெருமாள், இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: