ஸ்ரீரங்கம்: பவித்ர உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது. பவித்ரோத்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினம்தோறும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.