சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த பழங்குடியினர் ஆணையம் அமைக்க 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த பழங்குடியினர் ஆணையம் அமைக்க 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைத்துருவாக்கப்படும்” என்பதை  செயல்படுத்தும் விதமாக தலைவர், துணை தலைவர், நான்கு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலாளர் (முழு பொறுப்பு) ஆகியோர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டு 13.10.2021 முதல் செயல்பாட்டில் உள்ளது.

தற்போது ஆணையம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் புதிதாக 48 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியிடங்களுக்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, ஒரு துணைச் செயலாளர், ஒரு சார்புச் செயலர், ஒரு கணக்கு அலுவலர், இரண்டு பிரிவு அலுவலர், இரண்டு கோர்ட் மாஸ்டர், நான்கு உதவி பிரிவு அலுவலர், நான்கு தனிச்செயலாளர், நான்கு நேர்முக உதவியாளர்கள், இரண்டு எழுத்தர், இரண்டு உதவியாளர், இரண்டு தட்டச்சர், ஒரு பதிவுறு எழுத்தர், ஆகிய பணியிடங்கள் பணி மாறுதல் மூலமும், ஒரு கணிப்பொறி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலும், மேலும் ஆறு ஓட்டுநர், பதினொரு அலுவலக  உதவியாளர், இரண்டு இரவு காவலர் மற்றும் இரண்டு தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் பணியாளர் முகமை மூலமாகவும் ஆக மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இதற்கான ஆணைய நிர்வாக செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2 கோடியே 30 இலட்சமும்,

மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 இலட்சமும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆணையம் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: