கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் தேடப்படுபவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் தேடப்படுபவருக்கு முன்ஜாமீன் மறுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதனையடுத்து ஜூலை 17ம் தேதி பள்ளிக்குள் புகுந்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். சிலர் பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் பலரை கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் கடலூர் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், உள்ளூர் கேபிள் டிவி மற்றும் பத்திரிகை நடத்துகிறேன். இதற்காக செய்தி சேகரிக்க சென்ற என்னையும் காவல் துறையினர் குற்றவாளியாக சேர்ந்து தேடி வருகின்றனர். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரர் வாட்ஸ்அப் குரூப்பில் பிறரை கலவரத்தில் ஈடுபடும் விதமான குறுஞ்செய்தியை பதிவிட்டுள்ளார். கலவரம் நடந்த போது சம்பவ இடத்தில் இருந்துள்ளார் என்று வாதிட்டார். வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.

Related Stories: