மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட பின்னர், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவிப்பதோடு வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தேர்தல் கமிஷனில் மனு செய்தனர். இதனை எதிர்த்து உத்தவ் தாக்கவே அணியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ‘5 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணை நடத்தும்’ என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, அடுத்த மாதம் சில தேர்தல்கள் நடக்க இருப்பதால் சின்னம் வழங்குவதில் விரைவில் முடிவெடுக்கக் கோரி, ஏக்நாத் ஷிண்டே அணி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.