அசதாபாத்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணம் நோர்கல் மாவட்டம் மசார் தாரா பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இயற்கை பேரிடர் மேலாண்மை மாகாணத் தலைவர் எஹ்சானுல்லா எஹ்சான் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் மசார் தாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. முதற்கட்ட விசாரணையில் 6 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் கிடைந்துள்ளது. மொத்த சேதங்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் உணரப்பட்டது’ என்றார்.