கள்ளக்குறிச்சி பள்ளி சூறை தந்தை பெரியார் தி.க. நிர்வாகிக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்தது. பள்ளியில் இருந்த பொருட்கள், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டம், தொழுவந்தாங்கலைச் சேர்ந்த தந்தைப் பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பிரபு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், வன்முறை நிகழ்ந்தபோது சம்பவ இடத்தில் தான் இல்லை எனவும், எந்த வாட்ஸ் ஆப் குழுவுக்கும் தான் அட்மின் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் காவல் ஆய்வாளரை தாக்கியதுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆறு வாரங்களுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளையும் சின்னசேலம் போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரபுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: