ஏபிஆர்ஓ நேரடி நியமனம் தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை

சென்னை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களை நியமிக்க தடை கோரி மயிலாடுதுறையை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற நிலையில் தற்காலிக பணி நியமனத்தை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ள முடியாது. எனவே, இந்த  நியமனத்தை செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் நேரடி நியமனமாக நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தற்காலிக பணி நியமனத்திற்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அவசியமில்லை. தற்காலிக பணி நியமனத்தை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.  இதையடுத்து, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடைவித்த நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: