கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் 1வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நேற்று 3வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரு அலகுகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியால் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: