திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம்; செல்வம் எம்பி அடிக்கல் நாட்டினார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டிடத்திற்கு எம்.பி.செல்வம் அடிக்கல் நாட்டினார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் பகுதியில் கடந்த 1962ம் ஆண்டு நூலகம் துவங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பழமையான அடிப்படை வசதிகளற்ற கட்டிடம் என்பதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், ஜன்னல், கதவுகள் சேதமாகி விட்டதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் ஒழுகி நூலகத்தின் புத்தகங்கள் நனைந்து சேதமாகி விடுகிறது. மேலும், பழமையான நூலக கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் நூலகத்தில் படையெடுக்கிறது. இந்த நூலகம் இயங்கி வந்த நிலையில், இந்த நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என வாசகர்களும்,

பொது மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், புதிய நூலக கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எ.ல்ஏ வீ.தமிழ்மணி முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதில்,  பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், துணை தலைவர் வீ.அருள்மணி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், மாவட்ட கவுன்சிலர்

ஆர்.கே.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: