திருப்போரூர்: திருப்போரூரில், உள்ள போலீஸ் குடியிருப்பை முறையாக பராமரிக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் கடந்த 2014ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 20 காவலர்களுக்கான வீடுகள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மட்டுமே குடியிருக்கின்றனர். திருப்போரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இங்கு வசிக்காமல் தனியாக வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். உயர் அதிகாரிகள் இல்லாததால் போலீஸ் குடியிருப்பு முழுவதும் கவனிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதன் காரணமாக வளாகம் முழுவதும் பல்வேறு புதர்ச்செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், வளாகத்தில் நுழைவாயிலில் மதிற்சுவர் இல்லாததால், மாடுகள், பன்றிகள் நுழைந்து வளாகத்தை தங்களது ஓய்விடமாக மாற்றி வருகின்றன.