குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகரில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை தொடர்பான புகார் மற்றும் புதிய இணைப்பு பெறுதல் போன்றவற்றிற்காக குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளரை அணுகுவது வழக்கம். இந்நிலையில், இந்த வார்டில் பல மாதங்களாக உதவி பொறியாளர் இல்லை. இதனால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னை குறித்து புகார் செய்யவும், புதிய இணைப்பு பெறவும் முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் சாக்கடை அடைப்பு புகார்களை தெரிவிக்க மற்ற குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர்களை பொதுமக்கள் அணுகினால் அதை ஏற்காமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் பலமுறை மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் நியமிக்கப்படவில்லை. எனவே உடனடியாக உதவி பொறியாளர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: