காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி 3 நாளில் அறிவிப்பு: ராகுல் பிடிவாதத்தால் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான விரிவான அட்டவணை 3 அல்லது 4 நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. இந்த சூழல்நிலையில், செப்.20ம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ‘காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதித் தேதிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி  கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வெளியிடப்படும். அதில் வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் பெறுவதற்கான தேதிகளுடன் விரிவான அட்டவணை இருக்கும்’ என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருவதால், அகட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: