வத்திராயிருப்பு அருகே பரபரப்பு 8 மாதங்களாக வாடகை பாக்கி பிஎஸ்என்எல் ஆபீசுக்கு பூட்டு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அலுவலக வாடகை தராததால் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் முகமது ராஜா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பிஎஸ்என்எல் அலுவலகம் வாடகைக்கு இயங்கி வருகிறது. இவர் கடந்த நான்கு வருடமாக பிஎஸ்என்எல் அலுவலகத்தை காலி செய்து தருமாறு தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடந்த எட்டு மாதங்களாக அந்த அலுவலகத்திற்கு வாடகையும் தரவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன்பு பிஎஸ்என்எல் அலுவலக கேட்டில் இருந்த பூட்டுடன், இவரும் ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டார். இதனால் அலுவலகத்துக்கு உள்ளே வந்து பணிகளை தொடர முடியவில்லை. இதன் காரணமாக, வத்திராயிருப்புப் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நெட்வொர்க் வேலை செய்யாமல் பணிகள் பாதிப்படைந்தன. இந்நிலையில், தனது எட்டு மாத வாடகை பாக்கியை கொடுத்து விட்டு கட்டிடத்தை காலி செய்து தருமாறு முகமது ராஜா பிஎஸ்என்எல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

Related Stories: