திருக்காட்டுப்பள்ளி: கல்லணைக் கால்வாயில் ஆபத்தை உணராமல் பாலத்தின் மேலிருந்து குதித்து குளிக்கும் வாலிபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருக்காட்டுப்பள்ளி அருகே சுற்றுலா தலமாக விளங்கும் கரிகாலன் கட்டிய கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய பிரிவு ஆறுகள் செல்கிறது. இந்த ஆறுகளில் விவசாயத்திற்கு மட்டும் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடந்த வாரங்களில் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்ததாலும் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீராக இரண்டு லட்சம் கன அடிக்கும் மேலாக மேட்டூருக்கு வந்தது. மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட மழை நீர் முக்கொம்பு வழியாக காவிரியிலும், நேரடியாக கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டு சென்றது.