அதிமுக அலுவலக சாவி வழங்கிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சென்னை: அதிமுக அலுவலக சாவி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடையே யாருக்கு அதிகாரம் என்ற உச்சபட்ச பிரச்னை எழுந்துள்ள நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். மேலும் அன்றையதினம் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் உள்ளே நுழைந்தார்.

மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்கள் வாகனங்கள் உட்பட பல அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். இதையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதோடு, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனிநீதிபதி அமர்வு, ‘முன்னதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லது என்றும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையும் ரத்து செய்தது. மேலும் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதற்கும் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக கட்சியில் தற்போது உச்சகட்ட குழப்பங்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற பரபரப்பான சூழலில் அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சேகர் நாப்தே மற்றும் குருகிருஷ்ண குமார்,‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் விரிவான விசாரணை நடத்தாமல் எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது.  இருப்பினும் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தமைக்கு தொடர்பாக எல்லைக்கு உட்பட்ட வருவாய்த்துறை ஆட்சியர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: