கணவர் கண்டித்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை; போலீசார் விசாரணை

மாமல்லபுரம்: மாமல்லபுரம், திருக்குளத் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி பிரியா (24), அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி, கணவன் - மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மனைவி பிரியாவிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதை பலமுறை, சிவகுமார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு பிரியா அதிக அளவு மது குடித்துள்ளார். இதனை, சிவக்குமார் கடுமையாக கண்டித்துள்ளார். தொடர்ந்து, கணவன் - மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பிரியா தனது உடல் மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் படுகாயம் அடைந்து துடிதுடித்தார். இது குறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரியா, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இது குறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: