புழல்: திருமுல்லைவாயல் துணை மின் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் நிறுவப்பட்ட புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று காணொலி மூலம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் உள்ள திருமுல்லைவாயல் துணை மின் நிலையத்தில் 10 எம்விஏ மின்மாற்றி - 16 எம்விஏ திறனாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, சென்னை மேற்கு மேற்பார்வை பொறியாளர் அசோகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அருணாசலம், சிட்கோ திருமுல்லைவாயல் உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், செங்குன்றம் உதவி செயற்பொறியாளர் நந்தினி தேவி, ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் மற்றும் ஆவடி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து உதவி பொறியாளர்கள்,கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.