புதுச்சேரியில் சோக சம்பவம்: வீட்டில் தேசியகொடி ஏற்றியபோது முதியவர் மின்சாரம் தாக்கி சாவு

புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையில் வீட்டில் கொடி ஏற்றிய முதியவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பல வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. புதுவை லாஸ்பேட்டை அவ்வைநகர் 20வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் கயூம் (72). தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கடந்த 13ம் தேதி தனது வீட்டு மாடியில் கொடி ஏற்ற முடிவு செய்தார். இதற்காக இரும்பு கம்பியில் கொடியை கட்டி ஏற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே செல்லும் மின்கம்பியில் இரும்பு கம்பி உரசியது. இதில் அப்துல் கயூம் மின்சாரம் தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். வீட்டில் தேசிய கொடியேற்றிய முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: