மாணவர்கள் சேர்க்கைக்கான இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: அமைச்சர் பொன்முடி அறிவிக்கிறார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக, இன்ஜினிரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. இதை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். இதனை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும்.

இன்ஜினியரிங் படிக்க 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் கட்டணம், சான்று பதிவேற்றியவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சம்.

இதில் சுயநிதி கல்லூரிகளில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 627 பி.இ., பி.டெக், இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 900 இடங்களும், அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆயிரம் இடங்களும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 270 இடங்களும், பி.ஆர்க். படிப்பில் 106 இடங்களும் வருகின்றன. இந்த ஆண்டு கலந்தாய்வில் 434 இன்ஜினியரிங் கல்லூரிகள் இடம்பெற உள்ளது.

2018-ம் ஆண்டு முதல் இன்ஜினியரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு அரசுக்கு ஒப்படைக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை 509, 480, 461, 440 என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) சி.எஸ்.இ., தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் பகுதிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான என்ஜினியரிங் படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார்.  இதனை தொடர்ந்து வருகிற 20ம்  தேதி (சனிக்கிழமை) முதல் 23ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 21 தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

Related Stories: