திருவள்ளூர்: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்களை மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர் மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகங்களுக்கு புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு வந்து கோரிக்கை விடுத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜகவினர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனை நேரில் சந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களை மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றும், அதற்காக முதலில் மாவட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் அலுவல் காரணமாக வெளியே சென்றிருப்பதால் விவரத்தை சொல்லிவிடுகிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தெரிவித்ததையடுத்து பாஜகவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.