நான் ‘சாப்ட்’ முதல்வர் இல்லை தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்: கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: காவல் துறையில் உள்ளவர்கள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகக்கூடாது.  நான் சாப்ட் முதல்வர் இல்லை. தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக  மாறுவேன் என்று கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய நிறைவுரை வருமாறு: “எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன்” என்று உங்கள் லிமிட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் போதும், அதுவே முதல் வெற்றி. போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்துவிட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் “போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு” டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, இந்த பிரிவு வலுப்படுத்தப்படும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அண்டை மாநில காவல்துறையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் எல்லைப்புற சோதனை சாவடிகளை வலுப்படுத்திட வேண்டும்.

* தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவார பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில் கஞ்சா பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால், மலையை ஒட்டி அமைந்திருக்கும் வேளாண் நிலங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும்.

* சாதாரண பயணிகள் மூலமாகவும் கூரியர் வழியாகவும் போதைப்பொருள் வருவதாக சொல்லப்படுகிறது. பயணிகள் பேருந்துகள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

* ஆயத்தீர்வைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, புலனாய்வுத் துறை, சுங்கத்துறை, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* போதைப்பொருள் தயாரிப்பில் முக்கிய நபர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை சமூகத்திற்கு அம்பலப்படுத்தியாக வேண்டும்.

* போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென தனி குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, அதில் பள்ளி மற்றும் மாணவர்களை இணைத்து விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் இருக்கிறது. இதனை நுண்ணறிவு காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

* போதைப்பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்.

* போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகளின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்துபவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

* போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோர் உடனே ஜாமினில் செல்வதை தடுத்து நிறுத்துங்கள்.அதேபோல் “மீண்டும், மீண்டும் இந்த குற்றத்தை செய்யமாட்டார் என நீதிமன்றத்திற்கு திருப்தியளிக்கக்கூடிய விதத்தில் தகுந்த காரணங்களை சொன்னால் மட்டுமே, இக்குற்றத்தை செய்தவருக்கு ஜாமீன்” என்று இதே பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே திரும்பத் திரும்ப போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இச்சட்டப்பிரிவை பயன்படுத்த நீதிமன்றங்களின் உதவியை நாடுங்கள்.

* பள்ளிகள், கல்லூரிகள், சமூக கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் விற்பதற்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்கும் பிரிவை முழுமையாக பயன்படுத்துங்கள்.

* போதை உங்கள் சிந்தனையை அழிக்கும், உற்சாகத்தை கெடுக்கும், வளர்ச்சியை தடுக்கும், எதிர்காலத்தை பாழாக்கும், நண்பர்களிடம் இருந்து உங்களை பிரிக்கும், உறவினர்களை பகைக்கும், மொத்தத்தில் உங்களையே சிதைக்கும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள்.

மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் - போதை பாதை அழிவுப்பாதை, அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். மற்ற அனைத்து வளர்ச்சியையும் இந்த போதை வளர்ச்சி கெடுத்துவிடும், அழித்துவிடும். அதனால்தான் இந்த பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உங்களை அழைத்திருக்கிறோம்.இந்த ஆலோசனைகளை, அறிவுரைகளை, புதிய அறிவிப்புகளோடு - ஒரு எச்சரிக்கையையும் விடுக்க நான் விரும்புகிறேன். காவல்துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்ப நான் சொல்லி வருகிறேன். சாதாரண தவறுகளுக்கே துணைபோகக் கூடாது என்றால், நம்முடைய அமைச்சர் துரைமுருகன் சொன்னதுபோல, ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எந்த விதத்திலும் துணைபோகக் கூடாது.

இதை ஏதோ நான் விளையாட்டாக சொல்லவில்லை. இவர் ‘சாப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாப்ட். தவறு செய்வோருக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. என்டிபிஎஸ் சட்டத்தில் உள்ள 32பி (ஏ) பிரிவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், அப்படியொரு நிலைமைக்கு என்னையோ அல்லது உங்களையோ உங்களின்கீழ் உள்ள அதிகாரிகள் தள்ளி விடமாட்டார்கள், அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று இன்னமும் நம்புகிறேன். நமக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு, போதைப்பொருள் அறவே கூடாது. அந்த இலக்கை நோக்கி அனைவரும் நடைபோடுவோம். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: